|| யதோ வாசோ நிவர்தந்தே || - 13
ஆசிரியரின் முன்னுரை - பி ராதா கிருஷ்ண மூர்த்தி (பி.ஆர்.கே) ஸ்ரீ ராக்காடி பாபா மற்றும் ஸ்ரீ பூர்னானந்த சுவாமி ஆகியோரின் ஆசீர்வாதத்துடன், பாபாவின் பாதுகைகளுடன் கலவையிலிருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டோம். பாபாவின் பாதுகைகளை கண்டுபிடித்த சிறிது நேரத்திலேயே ராஜா காரு எங்களுடன் கலவையில் வந்து சேர்ந்து கொண்டார் . ராஜு காருவிக்கு ராக்காடி பாபா தனது பாதுகை வடிவத்தில் எங்களை எவ்வாறு ஆசீர்வதித்தார் என்ற கதையை நான் விவரித்தேன், அவரும் மகிழ்ச்சியடைந்தார்.
கார்த்திகை புனித மாதத்தில் திருவண்ணாமலைக்கு சென்றபோது, அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது , தங்குமிடம் கிடைப்பது கடினமாக இருந்தது . ஸ்ரீ ரமண மகர்ஷியின் ஆசிரமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ சேஷாத்ரி சுவாமியின் ஆசிரமத்திற்கு சுவாமிஜி எங்களை அழைத்து சென்றார். ஸ்ரீ சேஷாத்ரி சுவாமி 1929 இல் மகாசமாதி அடைந்தார். அவரது சமாதி மந்திரத்தில் தினமும் பூஜை செய்யப் பட்டு வந்தது . அன்று, ஸ்ரீ சேஷாத்ரி சுவாமியின் ஆசிரமத்தில் கூட பக்தர்கள் நிறைந்திருந்தார்கள் . அதிஷ்டான மந்திரத்தில் தினசரி பூஜை நடத்தும் பண்டிதர் சுவாமிஜியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார். அந்த பண்டிதர் சுவாமிஜியை அதிஷ்டான மந்திரத்துக்கு அடுத்து இருந்த தனது அறையில் தங்குமாறு கேட்டுக்கொண்டார். சுவாமிஜியும் ஒப்புக்கொண்டார். பண்டிதர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்த சுவாமிஜி அவரிடம் ஓய்வெடுக்க சொல்லி விட்டு , அதிஷ்டான மந்திரத்தில் என்னை பூஜை செய்யும்படி அறிவுறுத்தினார். அந்த வகையில், சுவாமிஜியின் ஆசீர்வாதத்துடன், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமியின் அதிஷ்டான மந்திரத்தில் மூன்று நாட்கள் சேவை செய்யும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. அந்த மூன்று நாட்களுக்கு ஸ்வாமிஜி பண்டிதரை கவனித்துக்கொண்டார், அவர் குணமடைந்த பிறகு, சுவாமிஜியுடன் சேர்ந்து அருணாச்சல கிரி-வலம் செய்தோம். கிரி வலத்தின் ஒரு பகுதியாக, அருணாச்சல மலையை சுற்றியுள்ள அனைத்து கோயில்களையும் பார்வையிட்டோம். நாங்கள் பார்வையிட்ட ஒவ்வொரு கோவிலிலும் சுவாமிஜி மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டார் . சில கோயில்களில் அவருக்கு மாலை அணிவித்து ஹராத்தி எடுக்கப்பட்டது . சுவாமிஜி இந்த வழியில் கொண்டாடப்படுவதைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அங்கு நாங்கள் பார்வையிட்ட முக்கியமான கோயில்கள் அருணாசலேஸ்வர சுவாமியின் கோயில், அபிதகுச்சலாம்பாள் அம்மாவின் கோயில் மற்றும் ஸ்ரீ ரமண ஆசிரமம் ஆகியன. அருணாச்சலத்தில் எங்களுக்கு சில சிறந்த அனுபவங்கள் கிடைத்தன . பின்னர் சுவாமிஜி திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள தபோவனம் என்ற சிறிய கிராமத்திற்கு எங்களை அழைத்து சென்றார்.

ஒரு சதகுரு ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் அந்த நேரத்தில் தபோவனத்தில் தங்கியிருந்தார். ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் 300 வயதுக்கும் மேற்பட்டவர் என்று சுவாமிஜி எங்களிடம் கூறினார். சிறிது காலம், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட பீடங்களின் ஒன்றான ஜோதிர் மடத்தின் தலைவராக இருந்தார். பின்னர் அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கடைசியில் தபோவனத்தில் குடியேறினார். 1965 மற்றும் 1968 க்கு இடையில், சுவாமிஜி ராக்காடி பாபாவுடன் இந்தியாவின் தெற்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். சில சந்தர்ப்பங்களில், சுவாமிஜி தனியாகவும் சுற்றுப்பயணம் செய்தார். ஒரு நல்ல நாளில் சுவாமிஜி தபோவனத்தை அடைந்தார். சுவாமிஜி பிக்ஷை எடுத்துக்கொண்டிருந்தபோது, ஒரு இல்லத்தரசி தன் அறியாமையால் அவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். சுவாமிஜியையை பற்றி தெரியாததால் அந்த கிராமத்தில் இருந்த எவரும் அவருக்கு எதையும் தர வில்லை. அது ஒரு நல்ல நாள் என்பதால், உள்ளூர் மக்கள் அனைவரும் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமியின் தரிசனத்திற்காக அவரது ஆசிரமத்திற்கு வெளியே வரிசையில் நின்றனர். சுவாமிஜி ஆசிரமத்தைநெருங்கி கொண்டிருந்த போது, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமி உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்தார். கம்பீரமான குரலில், அவர் பாட ஆரம்பித்தார்
‘ஸ்ரீசைலம் , ஓம், ஆனந்தம், பூர்னானந்தம், பொதிகைமலை ஜோதி ’
சுவாமிஜியை வரவேற்க ஆசிரமத்திலிருந்து வெளியே வந்தார் . ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமி ஒருவரை இது போன்ற முறையில் வரவேற்பதை கண்டிராததால் ஆசிரமத்தில் இருந்த பக்தர்கள் திகைத்து போனார்கள். இந்த வழியில், ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமி சுவாமிஜியை மிகுந்த பாசத்துடன் வரவேற்று ஆசிரமத்திற்குள் அழைத்துச் சென்றார். சுவாமிஜிக்கு தனி அறை மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமி தனது பக்தர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அனைவருக்கும் சுவாமிஜியின் தரிசனம் செய்து அவருடைய ஆசீர்வாதங்களை பெறுமாறு றிவுறுத்தினார்.அன்றைக்கு காலையில் சுவாமிஜிக்கு எதையும் வழங்க மறுத்த அந்த இல்லத்தரசி மற்றும் பிற உள்ளூர்வாசிகள், அவர்கள் செய்த மிகப் பெரிய தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினர். ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமி சுவாமிஜியை மீண்டும் தபோவனத்தில் தங்கச் சொன்னார். ராக்காடி பாபாவின் அறிவுறுத்தலின் பேரில் தான் இந்த சுற்றுப்பயணத்தில் இருப்பதாகவும், பயணம் முடிந்ததும் பாபாவிடம் திரும்புவதாகவும் சுவாமிஜி பதிலளித்தார். விரைவில், சுவாமிஜி தபோவனத்தை விட்டு வெளியேறினார். இதை சுவாமிஜி அவர்களே என்னிடம் விளக்கினார். அதன் பிறகு, இந்த முறை சுவாமிஜி என்னுடனும் ராஜு காருவுடனும் தபோவனம் சென்றார். இந்த முறை கூட, ஆசிரமத்தில் பக்தர்கள் நிறைந்திருந்தார்கள் . நாங்கள் ஆசிரமத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமியின் சீடரான பாலு காரு எங்களுக்காக காத்திருந்தார். ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமி சுவாமிஜியின் வருகையைப் பற்றி பாலு காருவிற்கு தகவல் தெரிவித்து , எங்களை வரவேற்று ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். சுவாமிஜியின் வரவேற்பில், ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமி மீண்டும் தனது கம்பீரமான குரலில், “ஸ்ரீசைலம், ஓம், ஆனந்தம், பூர்னானந்தம், பொதிகைமலை ஜோதி” என்று பாடினார். சுவாமிஜி அருகில் சென்றபோது, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமி, “குருவாரம், குருவாரம், குருசன்னிதி” என்றார். ராஜு காருவிக்கும் எனக்கும் என்ன என்று புரியவில்லை. நாங்கள் ஒரு ஞாயிற்று கிழமை அங்கு வந்தோம் . ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமி அடுத்த வியாழக்கிழமை வரை தங்கும்படி கேட்டுக் கொண்டதாக சுவாமிஜி எங்களுக்கு பின்னர் விளக்கினார் . எங்களுக்கு ஆசிரமத்தில் ஒரு அறை வழங்கப்பட்டது. நாள் முழுவதும் ஆசிரமத்தில் கழித்த பிறகு, மாலை நேரத்தில் , யாரும் அறியா வண்ணம் சுவாமிஜி என்னை ஆசிரமத்திற்கு வெளியே அழைத்துச் சென்றார். நாங்கள் அருகிலுள்ள ஒரு நதிக்குச் சென்றோம், நாங்கள் குளித்துவிட்டு, மேலும் தொலைவில் இருந்த ஒரு மலையின் உச்சிக்கு சென்றோம்.
குளிர்ந்த மலை காற்றுக்கு மத்தியில், ஒரு பௌர்ணமி நாளில் நிலவு ஒளிரும் இரவில் நான் சுவாமிஜியுடன் கழித்த நேரம் விலைமதிப்பற்றது. சுவாமிஜி இரவு முழுவதும் பல்வேறு தலைப்புகளை பற்றி பேசினார். சுவாமிஜி சொன்னதை புரிந்து கொள்ளும் ஞானம் எனக்கு இல்லாவிட்டாலும், அவர் பேசுவதை கேட்பது எனக்கு பரவசமாக இருந்தது . நாங்கள் இரவு முழுவதும் மலையில் கழித்தோம், சூரிய உதயத்திற்கு முன்பு ஆசிரமத்திற்கு திரும்பினோம். இந்த வழியில், நாங்கள் ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமியின் ஆசிரமத்தில் நான்கு நாட்கள் கழித்தோம், வியாழக்கிழமை அங்கிருந்து புறப்பட்டோம்.

தொடரும்